சென்னை,: மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்க இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தற்ேபாது தட்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, வரும் மார்ச் 2020ல் நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதியில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் 2020 மார்ச், ஜூன் மாதங்களில் நடக்கவுள்ள தேர்வுகளில் பழைய பாடத்திட்டத்தில் எழுதலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித் தேர்வர்களாக பிளஸ்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் தற்போது பிளஸ்2 தேர்வை எழுதுவதற்கும், பிளஸ்1ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்கு நேரில் சென்று ஜனவரி 2, 3ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்
பிளஸ்1, பிளஸ்2 தேர்வு எழுதி ஏற்கனவே தோல்வி அடைந்த பாடங்களில் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். மேற்கண்ட தேர்வுகளை முதல் முறையாக எழுத உள்ள தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேணடும். இவற்றுடன் தட்கல் கட்டணமாக ரூ.1000 பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.