திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 29 கிராமங்களை இணைத்து அமராவதி தலைநகர் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார். இதற்காக 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு விவசாயிகள் வழங்கினர். இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன், மாநிலத்தில் 3 இடங்களில் தலைநகர் அமைப்பது தொடர்பான தகவலை சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அமராவதியில் பாஜ மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் அமைக்க அடிக்கல் நாட்டிய உத்திராயணிபாளையத்தில் 2 மணி நேரம் மவுனவிரதம் இருந்தனர். அப்போது, அங்கு செய்தி சேகரிக்க வந்தவர்களை விவசாயிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், கிருஷ்ணா மாவட்டம், தொண்டக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமாவை போலீசார் கைது செய்தனர்.