திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. சபரிமலையில் இந்தாண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால், கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. பிறகு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. காலை 10 மணிக்கும் 11.40க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்றுடன் 41 நாட்கள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது.
கடைசி நாளான நேற்று மற்ற நாட்களை விட கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. இன்றும், நாளையும் (28, 29ம் தேதி) கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தெரியும்.