×

காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்; பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் - ரஜோரி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினர் தீவிர பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி நேற்று முன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் உரி, ஹஜிபீர் பகுதிகளில் சிறிய ரக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 2 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான டிவாவில் நடந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று பூஞ்ச் - ரஜோரி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த தக்க பதிலடியில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர்.



Tags : soldiers ,Kashmir ,Pakistani ,India ,Security Forces , India, Pakistan, Kashmir, Security Forces, Pakistani infiltration, 4 people killed
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!