சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கி தற்போது வரை தமிழகத்தில் பலமுறை வடகிழக்கு பருவமழை தீவிரமாக கொட்டியிருக்கிறது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் அதிகமான மழைப்பொழிவு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலும் மழைப்பொழிவு இருக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், குமரி மாவட்டம் களியல், புத்தன் அணை மற்றும் பெருஞ்சாணி ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.