இஸ்லாமாபாத்: எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தனது நாட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழந்து விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கொடுத்த பதிலடியில ஹஜி பிர் பகுதியில் இந்திய நிலைகள் சேதமடைந்தன. இந்திய ராணுவத்தை சேர்ந்த சுபேதார் உட்பட 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தாவா பகுதியில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்,’ என கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் ராம்பூரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.