சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் விளையாடிய இரண்டு சிறுத்தை குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது வெளியேறி, வனத்தையொட்டிய விளை பயிர்களை சேதப்படுத்தி, கால்நடைகளை அடித்து கொன்றுவிடுகின்றன. இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் என்பவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். தற்போது கரும்பு வெட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று காலை கரும்பு வெட்டும் பணிக்காக சென்ற கூலித் தொழிலாளர்கள் கரும்பு தோட்டத்தில் இரண்டு சிறுத்தை குட்டிகள் விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை கரும்பு தோட்டத்தில் முகாமிடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.