பெரம்பூர்: வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மனோன்மணி, வியாசர்பாடி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தப்படும், என உறுதியளிக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம், என்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 20 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகும் பொதுமக்கள் கலைந்து செல்லாததால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.