புதுடெல்லி: பீம் ஆப்ஸ் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வசதியை, தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது கடந்த 15ம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கை இணைத்து, அதன் மூலம் பாஸ்டேக் வழியாக கட்டணம் செலுத்தலாம். ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்தலாம். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, மொபைல் மூலமாக ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்பவும், டெபிட் கார்டு போல பொருட்களுக்கு பணம் செலுத்தவும் பீம் யுபிஐ ஆப்சை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பல்வேறு வங்கிகள், பேடிஎம், போன் பே, கூகுள் பே, ஏர்டெல் மணி போன்றவையும் பீம் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன.
மேற்கண்ட அனைத்து வித யுபிஐ ஆப்ஸ்கள் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வசதியை தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால், வாகனம் வைத்திருப்பவர்கள், செல்லும் வழியிலேயே தங்கள் பாஸ்டேக்கிற்கு மொபைல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தலாம் என தேசிய பண பரிவர்த்தனை கழகத்தின் முதன்மை இயக்க அதிகாரி பிரவீனா ராய் நேற்று தெரிவித்தார்.