போபால்: பிரதமர் மோடியின் வீழ்ச்சிக்கு பிரக்யா தாக்கூர் காரணமாகிவிடுவார் என மத்திய பிரதேச அமைச்சர் சஜன் சிங் வெர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பத்திரிக்கை மற்றும் தொலைத்தொடர்பு துறை தொடர்பான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள், போதிய வருகைப்பதிவு இல்லாததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை சந்திப்பதற்காக பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், போராட்ட இடத்திற்கு நேற்று சென்றார்.
அப்போது அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் பிரக்யாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பயங்கரவாதி திரும்பிப் போ என அவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக பிரக்யா திரும்பிச் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.பி.,யை பயங்கரவாதி என்கிறார்கள். இத்தகைய வார்த்தைகள் சட்டவிரோதமானவை மற்றும் அநாகரீகமானது. ஒரு பெண் எம்.பி.,யை அவமதித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர்கள் துரோகிகள். அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.
இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் சஜன்சிங் வெர்மா இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் பிரக்யாவை பார்த்து பயங்கரவாதி திரும்பிப் போ என கூச்சலிட்டதை நான் அறிந்தேன். பிரக்யா விமானத்திலோ அல்லது ரயிலிலோ அல்லது சாலையிலோ, எங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், குழந்தைகள் டிவியில் பிரக்யாவை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர், இப்போது ஜனாதிபதிக்கு மேலே இருப்பதை போல் நடந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் வீழ்ச்சிக்கு பிரக்யா, நிச்சயமாக காரணமாகிவிடுவார் என்றும் தெரிவித்தார்.