சென்னை: மசாஜ் சென்டர்களுக்கான தொழில் உரிமம் பெற வேண்டும் என்று அறிவித்து 8 மாதங்களில் ஆகியும் இதுவரை 16 பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். எனவே வரும் பிப்ரவரி மாதம் மூலம் உரிமம் இல்லாத சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் எந்தவித உரிமம் இல்லாமம் இயங்கும் மசாஜ் சென்டர்களை முறைப்படுத்தி, அனுமதி பெறுவதற்கான விதிகளை கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதன்படி மசாஜ் சென்டர்கள் அனைத்தும் தொழில் உரிமம் பெற வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு விதிகளையும் அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி பிசியோதெரபி, ஆக்குபேசனல் தெரபி, அக்குபஞ்சர் தெரபி உள்ளிட்ட படிப்புகளை அங்கீகரிகப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்து முறையான பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரைதான் நிலையங்களை நடத்த முடியும். வேலை நேரத்தில் கடையின் முதன்மை கதவு திறந்துதான் இருக்க வேண்டும். கதவுகளை மூடிவிட்டு எந்த விதமான பணிகளையும் செய்யக் கூடாது. அனைத்து அறைகளிலும் போதுமான விளக்குளை அமைக்க வேண்டும்.
நிலையத்தின் உள்ளே செல்லும் கதவு மற்றும் வெளியே வரும் கதவு ஆகிய இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமிரா அமைக்க வேண்டும். நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். உள்ளிட்ட பல விதிகளை வகுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் ஆகிய தொழில்களுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவிப்பு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை 16 விண்ணப்பங்கள் மட்டும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அழகு நிலையம் உள்ளிடட மசாஜ் சென்டர்கள் நடத்த இதுவரை 16 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 6 மசாஜ் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 சென்டர்கள் ராயபுரம் மண்டலத்திலும், 3 சென்டர்கள் தேனாம்பேட்டை மண்டலத்திலும் அமைந்துள்ளன. மீதம் உள்ள 10 விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. உரிய காலக்கட்டத்தில் தொழில் உரிமம் பெறாமல் நடத்தப்படும் சென்டர்கள் மீது வரும் பிப்ரவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.