சென்னை: தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.
260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாகவும், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2544 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4924 ஊராட்சி தலைவர் பதவி, 38,916 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 46,639 பதவிகளுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் கடந்த இரு வாரங்களாக தீவிரமாக நடந்து வந்தநிலையில், மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தேர்தலையொட்டி இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 27,30-ம் தேதிகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.