கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுனர் ஜக்தீப் தன்கார் வந்த காரை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜியும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுனர் தன்காருக்கு மாணவர்கள் கருப்புக் கொடி காட்டினர். அவர் வந்த காரை அனுமதிக்காததால் அவர் திரும்பி சென்றார். இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆளுனருமான தன்கார் மீண்டும் வந்தார். பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் அவரது காரை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். திரும்பி போ, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்புதெரிவித்து முழக்கமிட்டனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய முயன்றனர். எனினும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.