×

சிவகாசி அருகே பரபரப்பு: மகனை அசைவம் சாப்பிட டார்ச்சர் புரோட்டா மாஸ்டர் அடித்து கொலை: மனைவி, மைத்துனர் கைது

சாத்தூர்:  சிவகாசி அருகே மகனை அசைவம் சாப்பிடச் சொல்லி டார்ச்சர் தந்ததாக கூறி, புரோட்டா மாஸ்டரை அடித்துக் கொலை செய்த மனைவி, மைத்துனரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் (47). மனைவி தனலட்சுமி (40). மகன் அரவிந்த் (16). முத்துராஜ் அங்குள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை முத்துராஜ் இறந்ததாக, அவரது தாய்மாமா அழகர் ராமானுஜம் என்பவருக்கு, தனலட்சுமி போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மாலையுடன் முத்துராஜ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், முத்துராஜ் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசில் அழகர்ராமானுஜம் புகார் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற நாய் கிராமத்தின் நடுவில் நின்றது. பின், போலீசார் வீடு, வீடாக தனலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தேடினர். இதில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தனலட்சுமி, அவருடைய தம்பி சஞ்சீவி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, தனலட்சுமி, அவரது மகன் அரவிந்த், தம்பி சஞ்சீவி, தந்தை கோபால்சாமி, தாய் விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் வெம்பக்கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், தனலட்சுமியின் 17 வயது தம்பி, சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருப்பதால், வீட்டில் விரதம் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று முத்துராஜ் குடிபோதையில் அசைவ உணவுடன் வந்து, மகன் அரவிந்த்தை அசைவம் சாப்பிடச் சொல்லி அடித்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியும், அவரது தம்பி சஞ்சீவியும் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் முத்துராஜை கம்பால் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து தனலட்சுமி மற்றும் சஞ்சீவியை கைது செய்தனர். சபரிமலை செல்ல மாலை போட்டிருந்த மகனை அசைவம் சாப்பிடச்சொல்லி டார்ச்சர் செய்த கணவனை கம்பால் அடித்து மனைவி, மைத்துனர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sivakasi ,Torture proctor master ,death , Sivakasi, torcher, protea master, slaughter, wife, brother-in-law, arrested
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை