×

விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு ஒடிசா மாநில வாலிபர் கொலை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு ஒடிசா வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக நெல்லை வரை செல்லும் ஸ்வேதா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4 மணி அளவில் தாம்பரத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டு வந்துள்ளனர். விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு அடுத்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள சாத்துக்குடல் மேல்பாதி பகுதியில் இரவு 9 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, சண்டையிட்ட நபர்களில் ஒரு நபரை மற்றொரு நபர் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் ரயிலில் உள்ள அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டு ரயிலில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து விருத்தாசலம் ரயில்வே நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விட்டு ரயில் புறப்பட்டு சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே சப் -இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற 4 பேரை பிடித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களை விசாரித்ததில் இறந்து போன நபர் ஆகாஷ்தாஸ்(22) என்பதும் இவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்வதற்கு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் ஒடியா மொழியில் பேசுவதால் அவர்களின் வாக்குமூலத்தை அறிவதற்கு முடியாமல், ஒடியா மாநில மொழி தெரிந்த நபரை வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மொழிமாற்றம் செய்யும் நபர் வந்தால்தான் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் (பொ), விருத்தாசலம் ரயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்டு கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Odisha ,state youth , Murder
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை