காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்றார். புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநள்ளாறு சென்ற குடியரசுத்தலைவரை புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சுமார் அரைமணி நேரம் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டார். குடியரசுத் தலைவர் வருகையின் போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் ஏதும் நடைபெறுவதை தவிர்க்க காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.