கம்பம் : சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நிறைவடைவதாலும் தொடர் விடுமுறையாலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வாகனங்கள் பல கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.சபரிமலையில் கடந்த நவ. 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. டிச. 27ம் தேதி இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படுவதுடன் மண்டல பூஜை நிறைவடைகிறது. மண்டல பூஜை நிறைவு பெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சபரிமலை நோக்கி ஐயப்ப பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அரையாண்டு தேர்வு, புத்தாண்டு விடுமுறையும் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், நேற்று முதல் சபரிமலையில் பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கின்றனர். எருமேலி தொடங்கி பம்பாவாலி, துலாப்பள்ளி முதல் நிலக்கல் பார்க்கிங் வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நாராணன்தோடு பகுதியில் போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்களை அனுமதிக்கின்றனர். புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அனுப்பி வைக்கின்றனர். நேற்று அதிகாலை கணமலையிலிருந்து தொடங்கிய போக்குவரத்து நெரிசல் மாலை வரை நீடித்தது. கணமலையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள நிலக்கல் பார்க்கிங் வரை ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.