×

இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டத்திற்கு காரணம் அதிமுக எம்பிக்கள்தான் : கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: வன்னியகுல சத்திரிய மகா சங்கத்தின் 131வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் பலராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரோஸ், மோகன்குமார், கோவி அறிவழகன், முத்து முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சால்வை அணிவித்து சங்க நிர்வாகிகள் கவுரவித்தனர். பின்னர், 1000 பேருக்கு வேட்டி சேலை சட்டை, காலண்டர் வழங்கப்பட்டது. பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முதன்முறையாக பொதுமக்களும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள், இந்தியாவில் குடியேற கூடாது என சட்டம் கொண்டு வந்தால் தவறில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்தவர்களில் யார், யார் வெளிநாட்டினர் என பார்ப்பது பிரதமர் மோடியின் தவறு.

ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பெயரில் இதுபோன்று நடக்கிறது. மோடி, அமித்ஷா ஆகியோருடன் சேர்ந்ததால் அதிமுகவினர் சர்வாதிகாரிகள்போல் பேசுகின்றனர். இந்தியாவில் நடந்து வரும் போராட்டத்திற்கு காரணம் அதிமுக எம்பிக்கள்தான். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்திருந்தால் மசோதா தோல்வியடைந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், சங்க நிர்வாகிகள் சண்முகம், கவிஞர் முத்தரசன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MPs ,struggle ,AIADMK ,India ,KS Alagiri , AIADMK MPs ,responsible, struggle across India, KS Alagiri talk
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...