×

பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரின் பர்சை திருடிய இளம்பெண் கைது

சென்னை: புரசைவாக்கம் பொன்னன் 3வது தெருவை சேர்ந்தவர் யமுனா (40). இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தனது குழந்தைளுக்கு துணிகள் எடுக்க நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்றார்.  அங்கு, துணிகளை எடுத்துவிட்டு பில் போடும்போது, அவர் வைத்திருந்த பையில் இருந்து பர்ஸ் மாயமாகி இருந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த யமுனா, துணிக்கடையின் மேலாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, இளம்பெண் ஒருவர் யமுனாவிடம் இருந்து பர்சை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

உடனே துணிக்கடை ஊழியர்கள் உதவியுடன் கடையில் தொடர்ந்து நோட்டமிட்ட அந்த இளம்பெண்ணை பிடித்தனர். மேலும், சம்பவம் குறித்து வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திவ்யா (22) என்றும், இவர் பண்டிகை மற்றும் கூட்டம் நெரிசல் மிகுந்த கடைகளில் துணி எடுப்பது போல் நடித்து, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2,770 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : customer , Youth arrested , stealing customer's purse
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி