அண்ணாநகர்: அமைந்தகரை மார்க்கெட் அருகே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அமைந்தகரை காவல் நிலையம் சார்பில், காவல் நேய சேவை மையம் அமைக்கப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த பூத்தில், சுழற்சி முறையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இந்த போலீஸ் பூத் அறையை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தற்போது துருப்பிடித்து காணப்படுவதுடன், ஒரு பக்கம் சரிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், இதனை பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்ட இந்த போலீஸ் பூத் தற்போது சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், போலீசார் இதனை பயன்படுத்துவில்லை. எனவே, இதை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு ெகாண்டு வர வேண்டும், என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த போலீஸ் பூத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.