சென்னை: எழும்பூர் பாந்தியன் சாலை ரவுண்டானா அருகே உள்ள ருக்மணி லட்சுமிபதி சாலையில் சென்னை குடிநீர் வாரிய சேம்பர் அமைந்துள்ளது. இங்கு, நேற்று மதியம் உதவி பொறியாளர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், தொழிலாளர்கள் தண்டையார்பேட்டை சிவாஜி நகர் 6வது தெருவை சேர்ந்த செல்வம் (40), கொருக்குபேட்டையை சேர்ந்த தனசேகர் (45) ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், சேம்பரில் இறங்கி வால்வை திறந்தபோது எதிர்பாராத விதமாக விஷ வாயு வெளியேறியதால், தனசேகர் மற்றும் செல்வம் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சேம்பரில் இறங்கிய 2 தொழிலாளர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நிறுவன ஊழியர் பிரவீன் அங்கு சென்று பார்த்தார். அப்போது, இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து எழும்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி தீணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்களையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சேம்பரில் தொழிலாளர்களை இறக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.