×

குண்டு வீசி இரண்டு பேர் கொலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 ரவுடிகள் கைது: மேலும் 7 பேருக்கு வலைவீச்சு

சென்னை: பிரபல ரவுடி ஸ்ரீதர் இறந்த பிறகு அந்த இடத்தை பிடிக்க தொடர்ந்து நடக்கும் ரவுடிகளின் போட்டியில் நேற்று முன்தினம் 2 பேர் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடி ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் யார் பெரிய ரவுடி என்ற மோதல் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா, ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ் ஆகியோர் தனித்தனியாக அடியாட்களை வைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சித்து வருவதால் காஞ்சிபுரத்தில் பதற்றமே நிலவுகிறது.  

இந்நிலையில் நேற்று முன்தினம் தணிகாவின் நெருங்கிய நண்பர்களான காஞ்சிபுரம் ராயன்குட்டை தெரு பாபு மகன் ஜீவா (25), பூக்கடை சத்திரம் ரமேஷ் மகன் கோபி(25) ஆகிய இருவரையும், தினேஷ் கோஷ்டியினர் 5 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்து, திருவள்ளூர் மாவட்டம் பண்ணூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசியும், சரமாரியாக கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பினர். இதையடுத்து கொலை குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் அமைத்தார். தொடர்ந்து அவர்கள் காஞ்சிபுரம், வேலூர், சென்னை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தினேஷின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் மாவட்டம் கிளார் கிராமம் மோகன் மகன் ராஜா (24), தாமல் கிராமம் ரமேஷ் மகன் விக்னேஷ்(22), வையாவூர் காமாட்சி நகர் விநாயகமூர்த்தி மகன் அருண்குமார்(23) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மூவரையும், காஞ்சிபுரம் பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி., அரவிந்தன் தெரிவித்தார்.

15 கொலைகள் அரங்கேற்றம்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மறைந்த ரவுடி ஸ்ரீதருக்கு பின், யார் தாதா என்ற போட்டியில், தணிகா மற்றும் தினேஷ் ஆகிய இரு கோஷ்டிகள் இடையே 13 கொலைகள் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே இரு ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இதனால், கொலைகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இரு கோஷ்டிகளையும் சேர்ந்த பல ரவுடிகள் வெளியில் உள்ளனர். அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து உள்ளதால் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

Tags : Kanchipuram ,persons ,bomb blast , Bomb, two people killed, 3 rounds, arrested
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...