ஹவானா: 43 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டில் முதல்முறையாக பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதன் அண்டை நாடான கியூபா இது கரீபியன் கடலில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவுக்கு, அளவில் 90 மடங்கு சிறிதாக இருக்கும் கியூபா எப்படி இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என்ற கேள்விக்கு சந்தேகமில்லாத விடையாக திகழ்பவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் செயல்பட்ட நிழல் அரசுக்கு எதிராக, புரட்சியாளர் சேகுவேராவுடன் இணைந்து புரட்சியை நடத்தி, 1959ம் ஆண்டு கியூபாவில் பிரதமராக பொறுப்பேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ, பின்னர் 1976ம் ஆண்டு கியூபாவின் அதிபராகவும் உயர்ந்தார். கடந்த 2008ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக, இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரத்தையும் ஃபிடல் காஸ்ட்ரோ ஒப்படைத்தார். சுமார் 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, துணை அதிபரான மிக்வெல் டயாஸ் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிக்வெல் டயாஸ் கனல் கடந்த ஏப்ரல் மாதம் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1976ம் ஆண்டு வரை கியூபா பிரதமராக கடைசியாக பிடல் காஸ்ட்ரோ பதவி வகித்தார். அதன்பிறகு அதிபராக காஸ்ட்ரோ பதவியேற்றதும், பிரதமராக யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தில் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை செய்யப்பட்டது. அதன்படி, கியூபா நாட்டின் பிரதமராக 5 ஆண்டுகளுக்கு சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை, அதிபர் மிகேல் டயாஸ் கனால் நியமித்துள்ளார். இதற்கு அந்நாட்டு தேசிய சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.