சென்னை: மின்வாரியத்தில் துணைமின்நிலையமும் விநியோகம் செய்யப்படும் பகுதிக்கும் நீண்ட தூர இடைவேளியில் பல இடங்களில் அமைந்துள்ளன. இதனால் சீரான மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 13 முதல் 15 சதவீதம் அளவிற்கு மின்இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொருபுறம் ஓவர்லோடு பிரச்னையால் மின்சாதனங்கள் பழுதடைவதாக கூறப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் 507 பதுணைமின்நிலையங்களை அமைக்கப்பட்டுள்ள. இருப்பினும் மின்இழப்பு என்பது ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அதிக அளவில் பிரச்னை உள்ள பகுதிகளை தேர்வு செய்து, அங்கு புதிதாக துணைமின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள துணைமின்நிலையங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: மின்வாரியத்தில் தற்போது துணைமின்நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் டிராஸ்ன்பார்மகளின் ஆயில் பயன்படுத்தகூடிய பழைய தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் அதிக வெப்பம் ஏற்படும். மேலும் டிரான்ஸ்பார்மகளில் உள்ள கருவிகளில் பழுது ஏற்பட்டால், அதை ஊழியர்கள் நேரடியாக சென்று பார்த்து சரிசெய்ய வேண்டும்.
தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள், இத்தகைய டிரான்ஸ்பார்மர்களில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படும். இதன்மூலம் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏதேனும் ஏற்பட்டால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நவீன கருவிகள், பழுது குறித்த தகவலை சம்மந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும். இதன்மூலம் ஊழியர்கள் இருந்த இடத்திலிருந்தே பழுது குறித்த தகவலை தெரிந்து கொள்ள முடியும். மேலும் மின்இழப்பும் குறையும். தற்போது இந்தமுறையில் துணைமின்நிலையங்களை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.