×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரணை - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் ஜனவரி முதல் விசாரணை நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நவம்பர் 14ல் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் எந்தவித தடையும் விதிக்காத உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விரிவான விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில், 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. குறிப்பிட்ட வயது பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்த 1991ல் கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்தது.

இந்நிலையில் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மட்டுமல்லாமல், இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவை சேர்ந்தநாயர் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

இந்த அமர்வில், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வீல்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோரும் இடம்பெற்றனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: மதம் சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையாகும். இது தர்கா, மசூதி, சர்ச் என அனைத்திற்கும் பொருந்தும். அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமையுள்ளது. சபரிமலையில் மட்டுமின்றி, வேறு மதங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களிலும் பெண்களுக்கு தடை உள்ளது.

சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவை கேரள அரசு உட்பட அனைவரும் விளம்பரத்திற்காக பயன்படுத்திவிட்டனர் என்றுதான் நீதிமன்றம் கருதுகிறது. மதம் சார்ந்த விஷயங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்யப்படுகிறது.

Tags : hearing ,Supreme Court ,women ,Sabarimalai Ayyappan ,Sabarimala , Sabarimala, hearing, Supreme Court
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...