தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை தியாகப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (43). அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன், 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள், “எங்களுக்கு புதையலில் 2 கிலோ தங்க நகை கிடைத்துள்ளது. அதை பத்திரமாக வைத்துள்ளோம். தற்போது, மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால், அந்த தங்க நகையை வைத்துக்கொண்டு 5 லட்சம் தந்தால் போதும்” என கூறியுள்ளனர். 2 கிலோ தங்க நகை ₹5 லட்சத்திற்கு கிடைக்கிறது என்பதால், சசிகுமார் சம்மதம் தெரிவித்தார். உடனே, அவர்கள் ‘‘நாளைக்கு தங்க நகையை எடுத்து வருகிறோம். அதற்குள் பணத்தை தயார் செய்யுங்கள்,’’ என்று கூறிவிட்டு சென்றனர். அதன்படி, நேற்று முன்தினம் நகைகளை கொண்டு வந்து, சசிகுமாரிடம் கொடுத்துள்ளனர். அதை சசிகுமார் வாங்கி பார்த்தபோது, போலி தங்க நகை போன்று தெரிந்ததால் சந்தேகமடைந்து, அவர்களுக்கு தெரியாமல் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நகைகளை வாங்கி பார்த்தபோது, போலி நகை என தெரியவந்தது. பின்னர், அந்த இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பீம்பிரகாஷ் (34), குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஹரீஸ் (38) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து போலி நகைகளை கொடுத்து பலரை ஏமாற்றியுள்ளனர். இவர்களைப்போல் 10 பேர் கொண்ட கும்பல் சென்னையில் சுற்றித்திரிவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் இவர்களைப்போல் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.