புதுடெல்லி: ஜார்கண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பொறியியல் மாணவி வழக்கில் ராஜ் என்பவரை குற்றவாளி என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியின் ஓர்மன்ஜி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், 2018ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வழக்கு சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச்சில் சிபிஐ வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது. ஏற்கனவே இருந்த பல்வேறு வழக்குகள் அடிப்படையில் 10 பேர் சந்தேக பட்டியலில் கொண்டு வரப்பட்டனர். இதில், மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து மாயமான ராஜ் என்பவர் மீது சிபிஐ போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
விசாரணையில் அவன் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அங்கு அவன் மீது 5 வழக்குகள் இருந்தன. கடந்த ஜூன் 23ம் தேதி சிபிஐ அவனை காவலில் எடுத்து ராஞ்சிக்கு அழைத்து வந்தது. ராஜின் ரத்த மாதிரியும், எரித்து கொல்லப்பட்ட மாணவியின் கை நகங்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்துபோனது. பின்னர், அக்டோபர் 25ம் தேதி ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் 8ம் தேதி தொடங்கிய வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே மாதத்தில் விசாரணை முடிந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜ், குற்றவாளி என நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. ராஜிக்கான தண்டனை குறித்த தீர்ப்பு விவரங்களை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.