×

பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து நடைபெறும் திமுக தலைமையிலான பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: முத்தரசன், திருமாவளவன் அழைப்பு

சென்னை: பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்தும் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதை ஒடுக்கி விட வேண்டும் என்ற வெறியோடு மத்திய உள்துறை அமைச்சகம், காவல் துறை நிர்வாகத்தை பயன்படுத்தி அதிகார அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையில் கண்டனப் பேரணி நடத்துகிறது.

நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், ஜனநாயக உணர்வு கொண்டோர், மதச்சார்பற்ற கொள்கையாளர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என அனைத்து பகுதியினரும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார். திருமாவளவன்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள போராட்டங்களை வன்முறை மூலமாக ஒடுக்குவதற்கு பாஜக அரசு முனைந்திருக்கிறது. கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள் விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் எதிர்வரும் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுப் பேரணியை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : Mutharasan ,rally ,DMK ,governments ,AIADMK ,BJP ,Thirumavalavan , BJP , AIADMK governments, DMK, Mutharasan, Thirumavalavan
× RELATED பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக்...