சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் சிவ சுப்பிரமணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் சிவ சுப்பிரமணியன் மதுரையில் தங்கி, மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, நடூர் காலனியில் உள்ள சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கடந்த டிசம்பர் 2ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில்தலித் சமுதாயத்தை சேர்ந்த 17 பேர் பலியாகினர்.இதையடுத்து, நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,கடந்த 3ம் தேதி அவரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் வழங்க கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மனு
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது. எந்த உள் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நில உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டார்.மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது சிவசுப்ரமணியத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டது.