புதுடெல்லி: டெல்லி ஜம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின் ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜம்மா மசூதி வளாகத்திலேயே வெள்ளம் போல் திரண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிதேசத்தை சேர்ந்த பீம் படையை சேர்ந்த சந்திரசேகர் ஆசாத் ஜம்மா மசூதிக்குள் நடக்கும் ஆர்பாட்டத்திற்கு தலைமையேற்றுள்ளார். போராட்டம் நடத்தக்கூடாது என்று டெல்லி போலீஸ் தடை விதித்திருந்த நிலையில் மசூதி வளாகத்துக்குள்ளேயே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, அசாம், மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வன்முறை வெடித்தது.
ஜாமியா மிலியா பல்கலைக் கழகம்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுக்க அங்கு மாணவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் போலீசாரும் இரவு நேரத்தில் அங்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அமித்ஷா வீட்டை முற்றுகையிட முயற்சி
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு அருகே காங்கிரஸ் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடிய காங்கிரஸ் மகளிர் அணியினர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஷ்ட முகர்ஜி கைது
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஷ்ட முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மகளிர் அணி தலைவரான சர்மிஷ்ட முகர்ஜி குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
டெல்லியில் சாவ்ரி பஜார், செங்கோட்டை, ஜாமா மசூதி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.