புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் அவசரசிகிச்சை பிரிவை நோக்கி செல்வதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 16வது பொருளாதார ஆலோசகராக இருந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன். இவர் பிரதமர் மோடி அரசில் முதல் பொருளாதார தலைமை ஆலோசகராகவும் பதவி வகித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய முன்னாள் தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து இந்திய பொருளாதாரம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா 4 சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், மோசமான வட்டி வளர்ச்சி என்பதே அந்த 4 சவால்கள். வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் மந்த நிலையை சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்று ெகாண்டிருக்கிறது.
இது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மந்த நிலை. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில் வராக்கடன் அளவு அதிகரித்துள்ளது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி அளவு குறைந்து வருவதால் இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி குறைந்து விட்டது. நுகர்வும் குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில காலாண்டுகளில் வளர்ச்சி வீதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குைறந்துள்ளது. மேலும் தொடர்ந்து 6வது கால் ஆண்டாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் கடன்பட்டுள்ளதால் உற்பத்தி விகிதமும் வீழ்ச்சியடையும். தெளிவான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், விரைவான வளர்ச்சி பாதைநோக்கி திரும்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பங்கு சந்தை உயர்வு அரவிந்த் சுப்பிரமணியன் நேற்று அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடந்த தேசிய பங்கு சந்தை தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறுகையில், ` நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பங்கு சந்தை உயர்ந்து வருகிறது. எரிசக்தி துறை, ஐடி மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ள நிலையில் நேற்று பங்கு சந்தை 3வது முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என்றார் .