சென்னை, :குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகிற மற்றவர்களும் அமைதியான முறையில் போராட வேண்டும். இந்த இடங்களில் நமது குரல்தான் ஒலிக்க வேண்டும். கைகளை வன்முறைக்காக பயன்படுத்தக் கூடாது. அதேபோல் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடக்கூடாது. அதையெல்லாம் அவர்கள் கவனித்தபடி இருக்கிறார்கள்.
போராட்டக்காரர்கள் என்ன தவறு செய்வார்கள் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதங்களை சேர்ந்தவர்கள், எந்த ஆவணமும் காட்டாமல் இந்திய குடியுரிமை பெறலாம் என உள்துறை அமைச்சர் சொல்கிறார். ஆனால் முஸ்லிம்களை மட்டும் அதில் சேர்க்கவில்லை. முஸ்லிம்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இந்திய முஸ்லிம்களிடம் நீங்கள் கேட்கும் ஆவணம் இல்லாதபட்சத்தில் அவர்கள் என்ன செய்வார்கள். சக மனிதனாகவே இந்த போராட்டத்தில் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.