பெரியகுளம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்து எரிக்க முற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை, போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பஸ் நிலையத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் சட்ட திருத்த நகலை கிழித்து எரிக்க முயன்றனர். இதனால் அவர்களைப் பிடித்து இழுத்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கியதால் காவல்துறையினருக்கும், வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.