வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 178வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாறு மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் செயல்பட்டு வந்த மீன், கறி கடைகள் மற்றும் ஓட்டல் என மொத்தம் 4 கடைகள், மாநகராட்சியிடம் தொழில் உரிமம் மற்றும் சுகாதார சான்று பெறாமல் நடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அந்த 4 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.