டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொலை செய்யப்பட்ட போது தாம் சிறுவனாக இருந்ததாக குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்துள்ளார். 2012ம் ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா புதிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் குற்றம் புரிந்த போது தமக்கு 18 வயது நிரம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தமக்கு தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. தம்மை சிறுவர் நீதி சட்டத்தின் படிதான் நடத்த வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது. இதற்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கு 2013ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் தான் கீழமை நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. நீதிமன்றம் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆதலால் குற்றவாளிகள், நீதிமன்றத்தை முட்டாளாக்கப்பார்கிறார்கள். இந்த மனுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்த வழக்கை நான் எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன். ஜனவரி 7ம் தேதி வரை நான் காத்திருப்பேன் என குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வயது தொடர்பான ஆதார புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே 4 பேரை உடனே தூக்கிலிட வேண்டும் என கோரி தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பவன்குமார் தாக்கல் செய்துள்ள மனுவால் குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது.