பெரம்பூர்: பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் ரயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள் இரவு நேரத்தில் அச்சத்துடனே செல்கின்றனர். இப்பகுதியில் விரைவில் மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக உள்ள ரயில் நிலையம் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம். இந்த பகுதியில் இருந்து இறங்கி பெரம்பூர் நோக்கி வரும் ரயில் பயணிகள் கேரேஜ் ஒர்க்ஸ் சாலை வழியாகத்தான் போக வேண்டும். அவ்வாறு செல்லும் பயணிகள் தங்களது செல்போனில் டார்ச் லைட் அடித்தபடிதான் செல்கின்றனர். சாலையின் இருபக்கமும் செடிகள் சூழ்ந்து தெரு விளக்குகள் எரியாததால் தினம் தினம் ஒருவித அச்சத்துடனே அந்த பகுதியை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.
இதனை பயன்படுத்தி செல்போன் திருடர்கள் அதிகாலை பொழுதில் அந்த வழியாக செல்லும் நபர்களிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்து செல்வதும், இரவு நேரங்களில் மது பிரியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியில் இருந்தபடியே மது குடிப்பதும் தினம் தினம் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பெண்கள் அந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.