பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி குமாரி. தம்பதியின் மகன் சவுந்தர் (37). குடிபோதைக்கு அடிமையான சௌந்தர் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுவது, கடைகளில் வேலை செய்வது என அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை கணேசபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் சவுந்தர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான நபர் செல்வது தெரிய வந்தது. விசார்ணையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வரும் தேவராஜ் (53) என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று காலை சொந்த ஊரான பண்ருட்டியில் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் சவுந்தரும், தேவராஜூம் ஒன்றாக மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது தேவராஜ் மரத்தின் மீது ஏறி மரத்தை வெட்டுவதால் அதிக கூலி தந்ததாகவும், சவுந்தர் எடுபிடி வேலை செய்ததால் குறைவான கூலி தந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர் சம்பவத்தன்று தேவராஜை கடுமையாக திட்டியுள்ளார். மேலும், சம்பவம் நடந்த அன்று சவுந்தர் மது கேட்டு தேவராஜிடம் தொல்லை செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தேவராஜ் அருகில் இருந்த கல்லை தூக்கி சவுந்தரின் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் இறந்துள்ளார். பின்னர் எங்கே போலீசில் மாட்டி கொள்வோமோ? என பயந்து தேவராஜ் சொந்த ஊரான பண்ருட்டிக்கு தப்பி சென்றுள்ளார்.
இவ்வாறு தேவராஜ் கூறியதாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்தனர்.