சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் தொட்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன். ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர். இவர் உள்ளாட்சி தேர்தலில் ஓமலூர் ஒன்றியத்தில் 8வது வார்டில் போட்டியிட விருப்பமனு கொடுத்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முருகன் நேற்று காலை 10.30 மணிக்கு சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது, முதல்வரின் வீட்டு முன் உள்ள டீக்கடையில் நின்றிருந்த முருகன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பில் இருந்த போலீசார், முருகன் மீது தண்ணீரை ஊற்றி சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். வீட்டில் இருந்து சென்னை செல்வதற்காக காமலாபுரம் விமான நிலையத்திற்கு முதல்வர் புறப்பட்ட நேரத்தில் அதிமுக நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.