×

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் 20ம் தேதி முதல் 1000, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரகசிய உத்தரவு

சென்னை, : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் வருகிற 20ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரகசியமாக உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார்.

அதோடு, கடந்த 29ம் தேதி 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை, முதல்வர் எடப்பாடி சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கியும் வைத்தார். இதன்மூலம் 2.5 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக 2,363 கோடி நிதியும் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.

இதன்மூலம் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. பொதுமக்களும் தினசரி ரேஷன் கடைகளுக்கு வந்து எப்போது ₹1000 வழங்குவீர்கள் என்று கேட்டு வருகிறார்கள். அதேநேரம், வருகிற 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், வருகிற 20ம் தேதி (நாளை) முதல் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்க கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்குவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழக அரசும், தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அந்தந்த வங்கிக்கு தேவையான ரொக்கப்பணம் அனுப்பி வைத்து விட்டது. அதேபோன்று முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. தற்போது ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் 20ம் தேதி (நாளை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்க தயாராக இருக்கும்படி அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்ததும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 20ம் தேதி வழங்க முடியாவிட்டால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு 23ம் தேதி கண்டிப்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஊரக பகுதிகளுக்கு 25ம் தேதிக்குள் வழங்கி முடிக்க முடியும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றார். தற்போது வருகிற 27 மற்றும் 30ம் தேதி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : localities ,Tamil Nadu ,Rural Local Governments , In Tamilnadu, Rural Local Governments only , from 20th , 1000 Pongal Gift Package
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...