சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வணிகவரித்துறை புலனாய்வு குழு கடந்த 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் 145 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களிடம் 60 கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் வணிகவரித்துறை 60 முதல் 70 சதவீதம் தனது பங்களிப்பை அளிக்கிறது. வணிகவரிதுறையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் பதிவு செய்து உள்ளனர்.
இதில், உற்பத்தி பிரிவை சேர்ந்த வணிகர்கள் வரி செலுத்துவதற்கான வரம்பு 5 லட்சம், மாநிலத்துக்குள்ளேயே பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வணிகர்களுக்கான வரி வரம்பு 10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் வரவு, செலவு மற்றும் பொருட்கள் இருப்பு குறித்த கணக்கு விபரங்களை அந்தெந்த மண்டல வணிகவரி அலுவலகத்தில் வணிகர்கள் சமர்ப்பித்து, உரிய வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய நேரத்தில் கணக்குகள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும். இதில், வணிகர்கள் பலர் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்து முறையாக வரி செலுத்தி வருகின்றனர்.
ஆனால், ஒரு சிலர் மட்டுமே உரிய வரியை செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அவர்கள் பில் எதுவும் போடாமல் பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பொருட்களை போலி பதிவெண் கொண்ட பில்களுடன் கொண்டு வந்து வரி செலுத்தாமலேயே விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் இணை ஆணையர் தலைமையிலான புலனாய்வு குழு கடந்த 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் 145 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களிடம் 60 கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.