புதுடெல்லி: இதர நிறுவனங்களுக்கான செல்போன் அழைப்பு கட்டணத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நேற்று அறிவித்தது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய் அமைப்பு தொரடந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக டிராய் அமைப்பு பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.
செல்போன்களில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவன இணைப்பில் இருந்து வேறு நிறுவன இணைப்புக்கு, இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு, 14 காசுகளாக இருந்தது. இதை, 2017-ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 6 காசுகளாக ‘டிராய்’ குறைத்தது. தற்போதும், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா, கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை அழைப்பு மேற்கொண்ட நிறுவனம், அழைப்பை பெற்ற நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. இந்த கட்டணம், வருகிற ஜனவரி 1-ம் தேதியுடன் ரத்துசெய்யப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்த கட்டண ரத்து செய்வதற்கு, ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இணைப்பு கட்டணம் வசூலிக்கலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நேற்று அறிவித்தது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இக்கட்டணம் ரத்தாகும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.