×

சொத்து பிரித்து கொடுத்த தகராறில் டிராக்டர் ஏற்றி தந்தை படுகொலை: கொடூர மகனுக்கு வலை: மதுராந்தகம் அருகே பரபரப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே சொத்து பிரித்து கொடுத்த தகராறில் ஆத்திரமடைந்த மகன் டிராக்டரை ஏற்றி தந்தையை கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அருகே முருக்கம்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (75). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் 2 மகன்களில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் தனக்கு சொந்தமான சொத்துக்களை பிரித்து தர அண்ணாமலை முடிவு செய்தார். சொத்து பிரிப்பதற்கான பேச்சு வார்த்தையின்போது அண்ணாமலைக்கும், அவரது மகன் ஏழுமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அண்ணாமலையும், அவரது மகன் ஏழுமலையும் வயலில் டிராக்டர் மூலம் உழவு ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரை ஓட்டிக்கொண்டிருந்த ஏழுமலை திடீரென அண்ணாமலை மீது ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய  அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். மேலும், டிராக்டரை இயக்கிய ஏழுமலை உடனடியாக அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஏழுமலையை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் டிராக்டர் ஏற்றி தந்தையை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Tractor loader, father slaughter, cruel son, web
× RELATED இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது