×

குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம் கைலாசாவை அமைத்தே தீருவேன்: நித்தியானந்தா மீண்டும் உறுதி

புதுடெல்லி: கைலாசா தனி நாட்டை கட்டாயம் அமைத்தே தீருவேன் என சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கடத்தி குஜராத் ஆசிரமத்தில் சிறை வைத்துள்ளதாக சாமியார் நித்தியானந்தா மீது அளித்த புகாரின் பேரில், குஜராத் போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், தினமும் புதுப்புது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் அமெரிக்கா அருகே ஒரு தீவில் பதுங்கியிருப்பதாக தெரிகிறது. அந்த தீவை கைலாசா என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க போவதாக தெரிவித்திருந்தார். இதற்கு குடியுரிமை கேட்டு கடந்த வாரம் வரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நித்தியானந்தா வெளியிட்டுள்ள புது வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த 2003ம் ஆண்டு முதல் என் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதில், நான் நிரபராதி என நிருபித்துவிட்டேன். ஆன்மிகத் துறையில் தலைவனாகி ஆண்டுகள் பல கடந்து விட்டது. நான் ஏற்கனவே அறிவித்தபடி கைலாசா தனிநாட்டை அமைத்தே தீருவேன். இதில் சமரசத்துக்கு இடமில்லை. பரமசிவன் உத்தரவின் பேரில் பார்வதி தேவியின் ஆசியுடன் இந்த புதிய தேசம் உருவாகும்.  இதுவரை கைலாசாவில் தங்க குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த வாரம் இது 12 லட்சமாக இருந்த நிலையில் பொதுமக்களிடம் எனது கைலாசாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. என்று கூறியுள்ளார். நித்தியானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர் நீதிமன்றம் போலீசாருக்கு விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், அந்த வீடியோவில் போலீசாரையும் கிண்டல் செய்து நித்தியானந்தா பேசியுள்ளார்.

`எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா’
நித்தியானந்தாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து மீம்ஸ்கள் வெளியிட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தோன்றி அவர் சொற்பொழிவாற்றி வருகிறார். அதில் அவர், ‘முன்பு நாட்டில் பெரியளவில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்தான் அதை திசை திருப்ப என்னை பற்றி செய்திகள் வெளியாகும். ஆனால், தற்போது முழு நேரமும் ஊடகங்கள் என்னை பற்றி தான் பேசுகின்றன. மீம்ஸ் போடும் மாம்ஸ்களா... உங்களால் தான் கைலாசா பிரபலமானது. கிரி படத்தில் வரும் வடிவேல் காமெடியை போல் `எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா’ என்பதுபோல் எனது நிலை மாறிவிட்டது. கைலாசா தனி நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கடவுளின் அருளால் கைலாசாவை அமைப்பதை எனது திருப்பணியாக செய்தே தீருவேன். செய்து விட்டேன். நேரம் வரும்போது இதுகுறித்து அறிவிப்பேன்,’’ என்று கூறியுள்ளார்.


Tags : Nityananda , Requesting Citizenship, 40 lakh people apply, Nityananda, confirmed
× RELATED நித்யானந்தா உருவாக்கிய கைலாசா...