×

எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பழமையான மரங்களை வேறு இடத்தில் மாற்றி நட வேண்டும் : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எழும்பூர்  கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அங்குள்ள மரங்களை வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு அனுமதியளித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே மிக பழமையான 2வது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது. இந்த மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, 75 மரங்களில் பெரும்பாலானவை வயதான மரம் என்பதால் அவை  வேறு இடத்திற்கு மாற்றினால் மீண்டும் துளிர்ப்பதற்கு 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் மட்டும் உள்ளன. அதனால் 75 மரங்களில் குறைந்தபட்ச மரங்களை மட்டும் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதியளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட மரங்களின் நிலை குறித்தும், புதிய மரங்கள் நடப்பட்டது குறித்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Elder Ophthalmology Hospital ,High Court ,Govt , Elder Ophthalmology Hospital , replaced with old trees,High Court order to govt
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...