×

நிர்பயா வழக்கில் மரண தண்டனை: சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் புதிய அமர்வு அமைப்பு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கை அமர்வு நாளை விசாரிக்கிறது.

நிர்பயா பலாத்கார வழக்கு:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல்  உயிரிழந்தார். மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும்  பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மரண தண்டனை:

வழக்கில் தொடர்புடைவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய்  சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு:

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் வழக்கில் 4-வது  குற்றவாளியான அக்சய்குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விலகல்:

இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து  தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறுகையில், தன்னுடைய உறவினர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சார்பாக வாதிடுகிறார். இந்த சூழலில்  தான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் இதில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். புதிய அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்கும் என கூறினார். இந்த புதிய அமர்வில் இடம் பெறும் நீதிபதிகள் குறித்து நாளை காலை  அறிவிக்கிறேன். நாளை பிற்பகலுக்குப் பின் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என எஸ்.ஏ.போப்டே அறிவித்தார்.

புதிய அமர்வில் நாளை விசாரணை:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன்,  போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை நாளை விசாரிக்கிறது. இருப்பினும் அக்சய் குமார் மனுவை தள்ளுபடி செய்ய பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Death sentence in Nirbhaya case New Session Organized by Supreme Court Justice R.Banumathi
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்...