டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் போராட்டம்:
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தின்போது, பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர்.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது. போராட்டத்தின்போது, மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்முறை தொடர்பாக ஏற்கனவே குற்றப் பின்னணி உடைய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக விரோத சக்திகள் கண்காணிக்கப்பட்டு வருதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் போராட்டம்:
இந்நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூரில் சில வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்-போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீஸ் முயன்று வருகிறது. டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.