அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் நிழற்குடை மீது வளர்ந்து செடிகளால், நிழற்குடை சேதமாகி வருகிறது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக விளங்கி வருகிறது. அறந்தாங்கியில் இருந்து கூகனூர் குடியிருப்பு, சுப்பிரமணியபுரம், கால்நடை மருத்துவமனை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் அங்கு சுப்பிரமணியபுரம் ஊராட்சியால் அமைக்கப்பட்ட நிழற்குடையில் தங்கி, பேருந்து வரும்போது அதில் செல்வது வழக்கம். மழை மற்றும் வெயிலில் இருந்து மக்களை காக்கும் நிழற்குடை சுப்பிரமணியபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிழற்குடை, ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இல்லாததால், முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மேல்கூரையில் வேயப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளின் மேல்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த செடிகள் நெருக்கமாக வளர்ந்துள்ளதால், நீண்ட தூரத்தில் இருந்து பார்த்தாலும், நிழற்குடையின் மேல்கூரை பசுமையாக காட்சி தரும்.
நிழற்குடையின் மேற்கூரையில் செடிகள் முளைத்துள்ளதால், மேல்கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. மழை பெய்யும் காலங்களில் பயணிகள் நிழற்குடைக்குள் காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுப்பிரமணியபுரம் பயணியர் நிழற்குடையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, நிழற்குடையை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.