லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் சிறுநீரகம் தானம் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் அம்ரிக் கண்டோலா மற்றும் ஜோட்டி தம்பதிக்கு குறைப் பிரசவரத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அனயா கணடோலா என பெயரிடப்பட்டது. அந்த குழந்தைக்கு ஒருவித நோய் காரணமாக சிறுநீரகம், ஈரல் ஆகியவை பெரிதாக இருந்தது. நுரையீரல்கள் வளர்ச்சியடையாமல் இருந்தன. இதய பாதிப்பும் இருந்தது. அந்த குழந்தையின் சிறுநீரகம் பெரிதாகி 1.5 கிலோ எடையுடன் காணப்பட்டது. இதனால் அந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக 10 முதல் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த குழந்தைகள் டையாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டால்தான் அந்த குழந்தை இயல்பாக வாழ முடியும். இதற்காக சமூக இணையதளத்தில் ‘ஹோப் பார் அனயா’ என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு பிரசாரம் ேமற்கொள்ளப்பட்டது. இதையறிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேடியோகிராபர், சுரேந்தர் சபால் (36) சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கு பொருத்தமான தேர்வாக அமைந்தது. அதன்படி சபாலின் சிறுநீரகம் அனயாவுக்கு பொருத்தப்பட்டது. இதுகுறித்து அனயாவின் தந்தை அம்ரிக் கூறுகையில், ‘சூப்பர் ஹீரோக்கள் உண்மையானவர்கள் அல்ல என கூறுகிறார்கள். ஆனால் உண்மையான சூப்பர் ஹீரோ எங்களுக்கு கிடைத்துள்ளார்’’ என சுரேந்தர் சபால் பற்றி பெருமையாக கூறினார்.