×

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி : பணத்தை எடுக்க முடியாததால் ஆசாமி ஓட்டம்

சென்னை: சைதாப்பேட்டையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில், பணம் செலுத்தும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆசாமி, பணத்தை எடுக்க முடியாததால் தப்பினான். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆசாமியை தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் ஏடிஎம் இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் பாஸ்புக் என்ட்ரி இயந்திரம் என மூன்று இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர், இந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்து, அங்குள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது வங்கியின் மும்பையில் உள்ள தலைமையகத்தில் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உடனடியாக மும்பையில் இருந்து, வங்கி ஊழியர்கள் சம்பவம் குறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ஏடிஎம் மையத்தில் யாரும் இல்லை. இயந்திரம் மட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இயந்திரத்தை உடைக்க முடியாததால், கொள்ளையன் பாதியில் விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று, இயந்திரத்தை உடைத்த கொள்ளையன் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robbery ,Saidapet ,Genesee Road ,ATM ,Asami , Robbery at ATM, Genesee Road, Saidapet
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...