மும்பை: மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசு 35,298 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதியபோதே, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வோம் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மத்திய அரசு ஜிஎஸ்டி வழங்காமல் தாமதித்து வந்தது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறுகையில், ‘‘மாநிலங்கள் கேட்பது அவர்களின் உரிமை. அதை நான் மறுக்கவில்லை. அதேநேரத்தில், நுகர்வு குறைவு மற்றும் இயற்கை பேரிடரால் மத்திய அரசுக்கு வருவாய் குறைந்ததால் சுமார் 2 மாதங்களாக ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்க இயலவில்லை என நான் ஒப்புக்கொள்கிறேன்.
மத்திய அரசு இழப்பீட்டை கண்டிப்பாக அளிக்கும்’’ என்றார். ஜிஎஸ்டி மாற்றம் பற்றி கேட்டபோது, ‘‘ஜிஎஸ்டியை குறைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஆலோசனை நடத்தப்படவில்லை’’ என்றார். இதற்கிடையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசு 35,298 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் நேற்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களுக்கு நிலுவை தொகை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.